தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழிக்க வேண்டும் - மி்ஸ்ரா
22.01.2010

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று அந்தப் பதவியை முதன் முதலில் வகித்த பிரிஜேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அதிகாரம் மிக்க பதவியில் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தியாவிற்கு இப்பதவி தேவையில்லை என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அப்பொறுப்பை பிரிஜேஷ் மிஷ்ரா முதன் முதலில் வகித்து வந்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழித்துவிட்டு, அவசியம் என்றால் தேசிய பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தலாம். அத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடைமைப்பட்டவராவார் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.