ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினராக இந்தியாவுக்கு வாய்ப்பு
24.01.2010
ஐ.நா. பாதுகாப்பு அவையின் சுழற்சி முறை உறுப்பினருக்கான போட்டியிலிருந்து கஜக்ஸ்தான் விலகி இருப்பதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அவை உறுப்பினராக இந்தியாவின் வாய்ப்பு அதிகரிகத்துள்ளது. 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பாதுகாப்பு அவை உறுப்பினருக்கான தேர்தலில் கஜக்ஸ்தான் போட்டியிடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து.
தங்களுக்கு ரஷ்யக் குடியரசு நாடுகளின் அமைப்பு, இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு இருப்பதாக கஜக்ஸ்தான் கூறியிருந்தது. ஐரோப்பிய அமைப்பைச் சேர்ந்த ஜெர்மனி மற்றும் ரஷ்யக் குடியரசு அமைப்பைச் சேர்ந்த உக்ரைன் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதை அடுத்து இந்தியாவின் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமர் முகமது நஜீபின் வருகைக்குப் பின், மலேசியாவும் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.