திருவாரூரில் பாதாள சாக்கடை பள்ளங்களை சீர்படுத்தக் கோரிக்கை
19.01.2010
திருவாரூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்குத் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இப்பள்ளங்களை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாதாந்திர கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். திருவாரூரிலிருந்து நாகை செல்ல பேருந்தில் ரூ.8.50-க இருந்த கட்டணம் திடீரென ரூ.10 - க உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அறிவிப்புக்கு எதிராக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் செயல்படுத்திய இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
திருவாரூர் நகரில் ஷேர் ஆட்டோ வசதியை ஏற்படுத்த வேண்டும். பழைய ரயில் நிலையம் முதல் புதிய ரயில் நிலையம் வரையில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சாலையை உடன் அமைத்துத்தர வேண்டும். பயணிகளுக்கு பயன்படும் வகையில் பழைய ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை அமைக்க வேண்டும். சென்னை மற்றும் கொல்லம் பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.