44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தகுதியை இழக்கின்றன
20.01.2010
மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட நாட்டில் உள்ள 44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதியை இழக்கும் என்று மத்திய அரசு திங்கள் கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விபல் சர்மா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் ஏ.கே. பட்னாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகுதி இழக்கும் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
செயின்ட் பீட்டர்ஸ் தொழில் நுட்பக் கல்லூரி - ஆவடி, நூருல் இஸ்லாம் தொழில்நுட்பக் கல்லூரி - தக்கலை, மீனாக்ஷி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - காஞ்சீபுரம், செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - புதூர், செட்நாடு நர்சிங் கல்லூரி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி, அருள்மிகு கலசிலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி - விருதுநகர், பெரியார் மணியம்மை நுட்பக் கல்லூரி - தஞ்சாவூர், கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை, வேல்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கற்பகம் உயர்கல்வி நிறுவனம் - பொள்ளாச்சி, விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் - சேலம், பாலாஜி வித்யாபீடம் - பாண்டி ஆகிய கல்வி நிறுவனங்கள் தகுதி இழப்பைச் சந்தித்துள்ளன.