லண்டனில் 3D விளையாட்டுப் போட்டி நேரடி ஒளிபரப்பு
02.02.2010

உலகிலேயே முதல் முறையாக 3டி தொழில்நுட்பம் மூலம் கால்பந்து விளையாட்டு போட்டி லண்டனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விளையாட்டு அரங்கில் அமர்ந்து பார்ப்பதை விட 3D-ல் பார்ப்பது மிகவும் த்ரில்லிங் -ஆகவும், தத்ரூபமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.
ஆர்சினல் மற்றும் மான்செஸ்டர் இடையிலான இந்த போட்டியை சமீபத்திய 3D தொழில்நுட்பம் மூலம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது பப் -களில் இந்த ஒளிபரப்பை வழங்கியது. ஸ்கையின் முழுநீள 3D சேனல் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக வடக்கு லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் இருந்து இந்த போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு குழுக்களுடன் 2 ஒளிபரப்பை ஸ்கை வழங்கியது. வழக்கமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களுக்கு எப்போதும் போல ஒரு ஒளிப்பதிவும், 3டிக்கு என பிரத்தியேக ஒளிப்பதிவும் செய்யப்பட்டது. இதற்கென கமென்டரி, கேமரா, புரெடக்ஷன் உள்ளிட்ட குழுக்கள் தனித்தனியாக இயங்கின. ஆலன் ஸ்மித் மற்றும் ஆலன் பாரி ஆகியோர் கால்பந்து விளையாட்டின் நேரடி 3D ஒளிப்பரப்பு சேவையின் முதல் வர்ணணையாளர்கள் என்ற பெருமையை பெற்றனர்.