முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - மே. வங்க அரசு அதிரடி முடிவு

09.02.2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளையும் ஏற்பதாக அது அறிவித்துள்ளது. மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை முதன் முதலில் அமல்படுத்தவுள்ளது மேற்கு வங்க மாநில அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி கூறியுள்ளார். மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில், இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் கட்சிகளிடையே சிக்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கு திணறி வருகின்றன. இந்த நிலையில், அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேற்கு வங்க அரசு.

மேலும், கடந்த தேர்தலில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் திரினமூல் காங்கிரசுக்கும், காங்கிரஸுக்கும்தான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையை இன்னும் மத்திய அரசே அமல்படுத்தாத நிலையில் அதிரடியாக மேற்கு வங்க அரசு முந்திக் கொண்டுள்ளது காங்கிரஸை நெளிய வைத்துள்ளது.

World News

Tags : Adiyakkamangalam - 10% quota for Muslims in W. Bengal