பூமியை போன்ற கிரகம் இந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்படும்
04.02.2010

பூமியை போன்ற கிரகம் ஒன்று சூரியமண்டலத்துக்கு வெளியே இந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் மேயர் தலைமையில் ஒரு குழு 1995-ம் ஆண்டு சூரிய மண்டலத்துக்கு வெளியே முதல் கிரகத்தை கண்டுபிடித்தது. இந்த குழு பூமிபோன்ற ஒரு கிரகத்தை இந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்க இருக்கிறது. இந்த தகவலை பேராசிரியர் மைக்கேல் மேயரே தெரிவித்தார்.
லண்டனில் நடந்த ராயல் சொசைட்டி மாநாட்டில் பேசியபோது அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளில் தொழில் îட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சூரியமண்டலத்துக்கு வெளியே சூரியனை போன்ற நட்சத்திரங்களை சுற்றி வரும் 400-க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு சிலவற்றில் மட்டுமே உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது. பெரும்பாலானவை நட்சத்திரங்களுக்கு வெகு தொலைவில் உள்ளன. சில நட்சத்திரங்களுக்கு மிக அருகில் இருக்கின்றன. தொலைவில் இருந்தால் தண்ணீர் பனிக்கட்டியாக இருக்கும். அருகில் இருந்தால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் தண்ணீர் நீராவியாகி விடும். இவ்வாறு மைக்கேல் மேயர் கூறினார்.