நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள்
23.02.2010

மரணம் இல்லா பெரு வாழ்வு வாழ்வது குறித்து நம்நாட்டு சித்தர்கள் பல்வேறு வழிவகைகளை கூறியுள்ளனர். ஆனால், கோடியில் ஒருவர் கூட இந்த முறையை பின்பற்றவில்லை. மக்களிடத்திலிருந்து விலகி தனிமை குகைகளில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே இந்த முறையை பின்பற்றி நூறாண்டுகளை தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நடைமுறைக்கு இது ஒத்து வராத காரணத்தால் வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலர் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர் நிர் பார்சிலாய் தலைமையிலான குழுவினர் மனித ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். நமது மரபணுவில் உள்ள மூன்று ஜீன்கள் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இந்த ஜீன்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுக்கின்றன. மற்றொரு ஜீன் நீரிழிவு நோயை தடுக்கிறது, என்பதை ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் மரபணுவை பரிசோதித்த போது ஒரு சில ஜீன்கள் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கிறது, என்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, இந்த ஜீன்களை ஊக்குவிக்கும் மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இவர்கள் கண்டுபிடித்த சில மருந்துகளை செலுத்தி பார்த்ததில் மேற்கண்ட மூன்று ஜீன்களும் ஊக்கமடைவது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள பிரபல ஆய்வகங்களில் நடந்து வருகிறது. எனவே, நூறாண்டை கடந்து வாழ வைக்கும் மாத்திரை மூன்றாண்டுகளில் சந்தைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.